Wednesday, September 22, 2010

தமிழில் முதல் படக்கதை

தமிழில் வெளியான முதல் படக்கதை எது? ஆனந்த விகடனில்  ஓவியர் மாயா அவர்களின் கைவண்ணத்தில் "ஜமீன்தார் மகன்" எனும் கதைதான் தமிழில்  வெளியான முதல் படக்கதை என சிலமாதங்களுக்கு முன் பொக்கிஷம் பகுதியில் வெளியிட்டிருந்தனர்.  ஆனால், படக்கதை வாசகர்களில் பலருக்கும் இதில் உடன்பாடில்லை.  சரி, ஆனந்தவிகடனில் முதலில் படக்கதை வெளிவரவில்லை என்றால், பின் வேறெந்த இதழில் முதலில் வெளியானது என்னும் சந்தேகம் நம்மிடையே எழுகிறது.  எந்த காலகட்டத்தில் இந்த வடிவம் தமிழுக்கு வந்தது எனும் கேள்விகளும் எழுகின்றன.  
தமிழில் சிறுவர் இதழ்களே இப்படக்கதைகளுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்திருக்கும்.  எனவே சிறுவர் இதழ்களைக் கொண்டே இதன் முதல்வரவினை நாம் பார்க்கலாம். அந்தவகையில் சித்திரக்குள்ளன் எனும் இதழைக் குறிப்பிடலாம். முதன்முதலில் இவ்விதழ் தான் ஒரு கதையினை படக்கதையாக வெளியிட்டது.  இது 1949-இல் சிறுவர்களின் சித்திரப் பத்திரிகை” என்னும் வாசகத்துடன் வெளியானது. கார்ட்டூனிஸ்ட் சந்தனு என்பவரால் தொடங்கப்பட்ட இவ்விதழில் (1.5.1950- எனக்கு கிடைத்த இதழ்) காட்டுச்சிறுவன் கண்ணன், வேதாள உலகத்தில் விச்சு போன்ற சித்திரத்தொடர் கதைகள் வந்துள்ளன.  
இதுவரை எனக்குக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இப்படக்கதை தமிழில் வெளிவந்த முதல் படக்கதை எனும் கருத்தினை முன்வைக்கிறேன்.  யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.  இதுவே எனது முதல் பதிவு என்பதால் இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதையும் தெரிவுக்கவும்.